search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தியாவை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றது ஏன்? - சினிமா டைரக்டர் பகீர் வாக்குமூலம்
    X

    சந்தியாவை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றது ஏன்? - சினிமா டைரக்டர் பகீர் வாக்குமூலம்

    சந்தியாவை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றதற்கான காரணம் குறித்து அவரது கணவரும் சினிமா டைரக்டருமான பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். #Sandhya #Balakrishnan
    சென்னை:

    சென்னையில் துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் அவரது கணவர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது பாலகிருஷ்ணன் பதட்டம் இல்லாமல் இருந்தார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் போலீசாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

    சந்தியாவின் உடலை ஏன் துண்டு, துண்டாக வெட்டினீர்கள் என்று கேட்டபோது, அதற்கு மட்டும் பதில் அளிக்காமல் அமைதி ஆனார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    என் மனைவி மீது எனக்கு எந்த அளவுக்கு பாசம், அன்பு, காதல் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மீது வெறுப்பு, ஆத்திரம் இருந்தது. 2000-ம் ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. அவளுக்கு இப்போது 35 வயது. எனக்கு 51 வயது. அவள் நல்ல அழகு. நானோ சுமாரான அழகுதான். நான் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என் மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளார்.

    எனக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சந்தியாவும் நடிகை ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் இருந்தன. ஆனாலும் இல்லற வாழ்வு திருப்தியாக இல்லை.

    எங்கள் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் என்பதால் கிழவனை திருமணம் செய்து வைத்துவிட்டதாக தன் பெற்றோரிடம் சந்தியா கூறி வந்தாள். படுக்கைக்கு அழைக்கும் போதெல்லாம் கிழவன் என்று கிண்டல் செய்தாள். தாம்பத்திய உறவால் அழகு சிதைந்துவிடும் என்று கூறி என்னுடன் உறவு வைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டாள். இதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

    பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சென்னையில்தான் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். ஆனால் அவர் சில நாள்கள் வீட்டுக்கு வரமாட்டாள். தன் விருப்பம் போல வாழ்ந்தாள். அதை தட்டிக்கேட்டால் நான் உங்களுடன் வாழ விரும்பவில்லை என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேனே. அதன் பிறகு என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று எதிர்த்துப் பேசினாள்.

    அவள் அழகாக இருப்பதை காரணம் காட்டி பல வகையில் நிராகரித்தாள். இதுதான் எனக்கும் மனைவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். சந்தியாவின் ஒவ்வொரு கேள்வியும் என்னை அவமானப்படுத்தியதால் அவளை கொலை செய்த பிறகும் உடலைத் துண்டு, துண்டாகக் கூறுபோட்டேன்.’’

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    மனைவியைக் கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணன், அதன் பிறகு சர்வசாதாரணமாகவே இருந்துள்ளார். அவரின் இந்த மனநிலை குறித்து போலீசார் கேள்வி கேட்டனர். அதற்கு பாலகிருஷ்ணன் சிரித்துள்ளார்.



    சந்தியா கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்து அவரின் பெற்றோர், தங்கை மற்றும் உறவினர்கள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்களை போலீசார் காண்பித்த போது சந்தியாவின் அம்மா பிரசன்னா, ‘உன்னை இந்த நிலைமையில் பார்க்கவா சென்னைக்கு அனுப்பி வைத்தேன்’ என்று கதறி உள்ளார். அவருக்கு போலீசாரும் உறவினர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். #Sandhya #Balakrishnan
    Next Story
    ×