search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே புதையுண்ட நிலையில் ரத்தக்கறையுடன் ஆண் உடல் - போலீசார் விசாரணை
    X

    முத்துப்பேட்டை அருகே புதையுண்ட நிலையில் ரத்தக்கறையுடன் ஆண் உடல் - போலீசார் விசாரணை

    முத்துப்பேட்டை அருகே ரத்தக்கறையுடன் புதையுண்ட நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கடல் மற்றும் லகூன் செல்லும் பாதையில் ஆற்றுக்கு நடுவே நடுத்திட்டு என்ற பகுதி ஒன்று உள்ளது. அங்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சில நேரங்களில் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் கடலுக்கு செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று அந்த பகுதிக்கு ஒரு சில மீனவர்கள் நடுத்திட்டு சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியதைகண்டு அருகில் சென்று பார்த்தனர். அங்கு தலை, கால் ஆகியவை வெளியில் தெரிந்து புதையுண்ட நிலையில் ரத்தக்கறையுடன் சடலம் ஒன்று புதைத்து இருந்ததை கண்டு அதர்ச்சி அடைந்தனர்.

    மேலும் சற்று தூரத்தில் பூமியில் ரத்தக்கறைகளும் அதிகளவில் இருந்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் உடல் புதையுண்டு இருந்ததையும், அதன் அருகே பூமியில் அதிகளவில் ரத்தக்கறைகளும் இருந்தது.

    அதனால் இறந்து புதைக்கப்பட்ட உடல் கொலை செய்யப்பட்டு அங்கிருந்து இழுத்து சென்று புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

    இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நடுத்திட்டு பகுதியில் ஜாம்பு வானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவகுமார்(35) என்ற மீனவர் தனது மனைவி நேசமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டுக்கு செல்லாமல் சில ஆண்டுகளாக இந்த நடுத்திட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவரை 15 தினங்களுக்கு மேலாக காணவில்லை. அதனால் யாரேனும் அவரை கொலை செய்து புதைத்து சென்று விட்டார்களா? அல்லது இறந்து கிடப்பவர் வேறு நபரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து ஜாம்புவானோடை வி.ஏ.ஓ. இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதைந்து கிடக்கும் உடலை மீட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இன்று அதே இடத்தில் பிரேதப்பரிசோதனை நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் ரத்தக்கறையுடன் புதையுண்ட நிலையில் சடலம் கிடக்கும் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×