search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதி கட்டத்தில் 4 வழிச்சாலை பணி - மானாமதுரையில் ரெயில்வே கேட் மூடப்படுகிறது
    X

    இறுதி கட்டத்தில் 4 வழிச்சாலை பணி - மானாமதுரையில் ரெயில்வே கேட் மூடப்படுகிறது

    மானாமதுரை பகுதியில் 4 வழிச்சாலை பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து மானாமதுரையில் இயங்கி வந்த ரெயில்வேகேட் விரைவில் மூடப்பட உள்ளது.
    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கி தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதி அனைத்திலும் உயர் மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது மானாமதுரையை அடுத்த கமுதக்குடி மற்றும் திருப்புவனம் பாலங்கள் தவிர்த்து மற்ற பாலங்கள் வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்கள் கட்டப்பட்ட இடங்களில் உள்ள ரெயில்வே கேட்கள் விரைவில் மூடப்பட உள்ளன. அதன்படி மானா மதுரையில் இருந்து மதுரை செல்லும் அகல ரெயில் பாதையின் குறுக்கே தற்போது ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. தற்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவிலில் இருந்து மானா மதுரை புதிய பஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புதிய பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தில் இரு பாதை வழியாக போக்குவரத்து அனுமதிக்கபட்டு வருகிறது. இதையடுத்து இனி மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் நேரடியாக மானாமதுரை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விடும். இடையில் உள்ள மானா மதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காது.

    மேலும் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் மதுரை செல்லவும் மதுரையில் இருந்து மானாமதுரை நகருக்குள் வரவும் புதிய பஸ் நிலையம் வந்து தான் செல்ல முடியும். மேலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த மானாமதுரை அண்ணா சிலை மற்றும் பை-பாஸ் பஸ் நிறுத்தம் இனி பயன்பாட்டில் இருக்காது. வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மானாமதுரை நகர் பகுதிக்குள் வர வேண்டுமானால் சிவகங்கை செல்லும் பஸ்களில் பயணம் செய்தால் தான் நகருக்குள் வரமுடியும்.

    மேலும் சிவகங்கை செல்லும் பஸ்கள் அனைத்தும் மானாமதுரை அண்ணாசிலை வழியாக சர்வீஸ் ரோட்டில் சென்று அதன் பின்னர் இடது புறத்தில் ஏறி பாலத்தை கடந்து தான் புதிய பஸ் நிலையம் செல்லும். மேலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை செல்லும் வாகனங்கள் அனைத்தும் தல்லாகுளம் முனியாண்டி கோவிலை சுற்றி வந்து வலது புறமாக திரும்பி சர்வீஸ் ரோடு, அண்ணாசிலை, தேவர் சிலை, காந்தி சிலை, சிப்காட் வழியாக சிவகங்கைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் சரக்கு வாகனங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கைக்கு செல்ல வேண்டுமானால் மானா மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பை-பாஸ் பாலம் வழியாகத்தான் செல்ல முடியும். இந்த புதிய வழி போக்குவரத்து நடைமுறை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த புதிய வழித்தட பயணத்திற்கான கருத்து கேட்பு நடத்துவதற்காக தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    இந்த புதிய வழித்தடம் குறித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதும் மானாமதுரையில் உள்ள ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பை-பாஸ் அண்ணாசிலை பஸ் நிறுத்தமும் மூடப்பட உள்ளது. அத்துடன் சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட 7 ரெயில்வே சந்திப்புகளில் ஒன்றான மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டும் மூடப்பட உள்ளது.
    Next Story
    ×