search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது
    X

    கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது

    கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 51).

    இவர் வேலாண்டிபாளையத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். வீரகேரளத்தை சேர்ந்த பத்மநாபன்(42) என்பவர் அடிக்கடி கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து கடன் பெற்ற வகையில் சரவணகுமார் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர் நாகராஜ்(43) ஆகியோருடன் நெருங்கி பழகினார்.

    இதனடிப்படையில் பத்மநாபனுக்கு சரவணகுமார் கடனுதவி செய்தார். ஆனால் பத்மநாபன் ஒழுங்காக பணத்தை திருப்பி கொடுக்காததால் உதவி செய்வதை சரவணகுமார் நிறுத்தினார். எனவே அவர் மீது பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சரவணகுமாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அவரை கடத்தி மிரட்டினால் எளிதில் பணம் கொடுத்து விடுவார் என்றும் பத்மநாபனிடம் நாகராஜ் ஆசைகாட்டினார். அதன்படி சரவணகுமாரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டிய பத்மநாபன் தனது நண்பரான ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் விஷ்ணுகுமாரின் உதவியை நாடினார். அவர் தனது கூட்டாளிகளான பாலன், கணபதியை சேர்ந்த அய்யப்பன், போத்தனூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் இந்த திட்டத்துக்கு சேர்த்துக் கொண்டார்.

    அதன்படி கடந்த 27.07.2016 அன்று சாய்பாபாகாலனியில் நடந்து சென்ற சரவணகுமாரை பத்மநாபன் உள்பட 6 பேரும் சேர்ந்து காரில் கடத்திக் கொண்டு ஆனைக்கட்டிக்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் தங்க வைத்து சரவணகுமாரை ஒரு பெண்ணுடன் சேர்த்து படம் எடுத்துள்ளனர். அந்த படத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டினர். பயந்து போன சரவணகுமார் என்னிடம் ரூ.25 லட்சம் தான் உள்ளது எனக் கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார். இதனால் அவரை விடுவித்தனர்.

    அதன்பின்னரும் பத்மநாபன் அடிக்கடி சரவணகுமாரிடம் பணம் கேட்டார். தரமறுத்தால் பெண்ணுடன் சேர்த்து எடுக்கப்பட்ட உனது ஆபாச படத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதனால் சரவணகுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 7 மணி அளவில் கருணாநிதி நகர் பகுதியில் சரவணகுமார் சென்ற போது அவரை பத்மநாபன் வழி மறித்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார், கார்த்திகேயன், அய்யப்பன், பாலா ஆகிய 6 பேர் மீதும் கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பாலா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×