search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி கொள்ளை
    X

    கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி கொள்ளை

    கொருக்குப்பேட்டையில், நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது. #GoldRobbery
    பெரம்பூர்:

    சென்னை கொருக்குப்பேட்டை உள்ளாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவர், சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வீட்டின் அருகிலேயே சொந்தமாக நகைக்கடையும் வைத்து உள்ளார்.

    நேற்று இவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். சந்தோஷ், கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    அதில், சந்தோஷ் வியாபாரத்துக்காக தனது வீட்டில் வைத்து இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என சந்தோஷ் வீடு மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    அத்துடன் நகை வியாபாரி சந்தோசிடமும், அவரது வீட்டுக்கு யார் யார்? வந்து செல்வார்கள்?, உண்மையிலேயே நகை, வெள்ளி கொள்ளை போனதா? அல்லது நாடகம் ஆடுகிறாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #GoldRobbery
    Next Story
    ×