search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பொருளுக்கு பதில் 12 வகை மாற்றுப் பொருட்கள் - கடைகளில் விற்க அரசு ஏற்பாடு
    X

    பிளாஸ்டிக் பொருளுக்கு பதில் 12 வகை மாற்றுப் பொருட்கள் - கடைகளில் விற்க அரசு ஏற்பாடு

    பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக பயன்படுத்த 12 வகை மாற்று பொருட்களை கடைகளில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. #PlasticBan
    சென்னை:

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிகம் முழுவதும் நாளை (1-ந்தேதி) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    1-ந்தேதிக்கு பிறகு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்க சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை அலுவலர், போலீஸ் அதிகாரிகள் இடம் பெறுகிறார்கள்.

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    பிளாஸ்டிக் சீட், உணவு இருந்தும் மேஜையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் தெர்மகோல் பிளேட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய், பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் ஜாடிகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பாலி புரொப்லின் பைகள், பிளாஸ்டிக் டீ கப், தெர்மகோல் கப், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவை தடை செய்யப்பட உள்ளன.

    அதற்கு பதிலாக பயன்படுத்த 12 வகை மாற்று பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. வாழை இலை, பனை பொருட்கள், கண்ணாடி டம்ளர்கள், பீங்கான் குவளைகள், மூங்கில் பொருட்கள், காகித பை, காகித குழல், துணி - சணல் பைகள், அலுமினிய பொருட்கள், மண்பாண்ட வகைகள், தாமரை இலை, உலோக டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதை கடைகளில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தென்மண்டல பிளாஸ்டிக் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர ரத்னு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க 6 மாத காலம் அவகாசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். அதன் பிறகே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையை அமல்படுத்த உள்ளோம். இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தினோம். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் கால அவகாசம் கொடுக்கவில்லை.

    அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் முன்னுதாரணமாக இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தினார்கள்.

    தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பெரிய நகரங்கள், டவுன் பஞ்சாயத்துகள், மாவட்டங்களில் மக்கள் வந்து செல்லும் இடங்களான பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மூலமும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

    மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய விரும்புபவர்களுக்கும், விற்பனை செய்ய விரும்புபவர்களுக்கும், இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.

    தமிழகத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி வந்தால் சோதனைசாவடியில் நிறுத்தி பறிமுதல் செய்ய மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, பயன்படுத்தினாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    Next Story
    ×