search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே  அரிவாளை காட்டி மிரட்டி 13 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரிவாளை காட்டி மிரட்டி 13 பவுன் நகை-பணம் கொள்ளை

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே பட்டப்பகலில் அரிவாளை காட்டி மிரட்டி 13 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலியை சேர்ந்தவர் சிவசங்கரபாண்டியன் (வயது68), ஜோதிடர்.

    சில நாட்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர். சிவசங்கரபாண்டியன் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஓட்டலில் சாப்பிடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம ஆசாமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தான்.

    அவன் பீரோவை திறந்து அதில் இருந்த 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு, ரூ.ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினான்.

    அப்போது வீட்டுக்கு வந்த சிவசங்கரபண்டியன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றார்.

    இதை அறிந்த திருடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி சிவசங்கரபாண்டியனை மிரட்டினான். இதனால் உயிருக்கு பயந்த அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அதற்குள் திருடன் வீட்டின் பின்புறம் வழியாக நகை-பணத்துடன் தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×