search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே நள்ளிரவில் விபத்து- கண்டெய்னர் மீது லாரி மோதி டிரைவர் பலி
    X

    சேலம் அருகே நள்ளிரவில் விபத்து- கண்டெய்னர் மீது லாரி மோதி டிரைவர் பலி

    சேலம் அருகே நள்ளிரவில் கண்டெய்னர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேலம்:

    திருப்பூரில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி நேற்றிரவு பெங்களூருக்கு புறப்பட்டது. லாரியை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையம் பிரிவு ரோடு அருகே நள்ளிரவு 12 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சென்டர் மீடியனை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்றது. அதே நேரத்தில் திருவள்ளூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இந்த லாரி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். கிளீனராக இருந்த திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த பிரித்விராஜா கால்கள் முறிந்து உயிருக்கு போராடினார். கண்டெய்னர் டிரைவரான வேலூர் மாவட்டம் புங்கைநல்லூர் பகுதியை சேர்ந்த உதயன் (26) லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி மற்றும் மகுடஞ்சாவடி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய படி கிடந்த பிரித்விராஜாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான மணிகண்டன் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கோழிகளும் இறந்தன.

    விபத்தில் சிக்கிய இரு வாகனங்களையும் அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்றிரவு அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    சேலம் மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55). தொழிலாளியான இவர் நேற்றிரவு அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×