என் மலர்
செய்திகள்

கூடலூர் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கூடலூர்:
தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. விவசாயி. அவரது மகள் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகிறார்.
கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற பள்ளி மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர்.
மேலும் விசாரித்ததில் அதே ஊரைச் சேர்ந்த தயாளன் மகன் கவுதம் மாணவியை கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டு தேடி வந்தனர். ஆனால் மாணவியுடன் கவுதம் மதுரையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அவர்களை கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மைனர் பெண்ணை கடத்தியதால் கவுதமை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.