search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை
    X

    கோத்தகிரியில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை

    கோத்தகிரியில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்குமார். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு 3 வயதில் கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார்.

    மகனுடன் லோகேஸ்வரி கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை தோறும் லோகேஸ்வரி மற்றும் அவரது மகனை மாமனார், மாமியார் வீட்டுக்கு வந்து பார்த்துச்செல்வது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் அங்கு வந்தனர்.

    வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் பின் பக்க கதவுக்கு அருகே சென்று பார்த்தபோது கதவு வழியே ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி சத்தம்போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

    இது குறித்த கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு லோகேஸ்வரி மற்றும் அவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். லோகேஸ்வரியை பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. சிறுவன் கார்த்திகேயனுக்கு உயிர் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

    அங்கு ஆபத்தான நிலையில் கார்த்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொலை செய்யப்பட்ட லோகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாய் மில்டனை வரவழைத்து துப்பு துலங்கினர். அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கொலை குறித்து குன்னூர் டி.எஸ்.பி. கோத்தகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×