search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிக அளவில் ஊழல்- ராமதாஸ் தகவல்
    X

    தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிக அளவில் ஊழல்- ராமதாஸ் தகவல்

    தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44 சதவீதம் ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரிய வந்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். #ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது மிகவும் வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.

    ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த மாநிலங்களில் முறையே 59 சதவீதம், 56 சதவீதம் ஊழல் நிலவுவதாக கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44 சதவீதம் ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரிய வந்துள்ளது. அடுத்தபடியாக 17 சதவீதம் ஊழல் காவல்துறையிலும், 15 சதவீதம் ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25 சதவீதம் ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதில் யாருக்கும், எந்த ஐயமும் தேவையில்லை. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுவதை அத்துறையை அணுகியவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

    எந்த ஆதாரமும் இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி உதவி பெறுவதற்கு தேவையான சான்றுகளை வழங்கவும், கணவர் மறைந்த நிலையில் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற தாய் அவருக்கான அரசு உதவித் தொகையை பெறுவதற்கு தேவையான சான்றுகளைக் கொடுக்கவும் கையூட்டு வாங்குவதை விட மிகக்கொடூரமான குற்றம் எதுவும் இருக்க முடியுமா? இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், ஊழலுக்கு ஆதரவாளர்களாக மாறி ஊழல்வாதிகளைக் காப்பாற்றவும், ஆதரிக்கவும் துடிப்பது தான்.

    அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றி செயல்படுத்துவது தான். அதனால் தான் தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    சாதிச்சான்று, பிறப்புச்சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின்இணைப்பு வழங்குதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை இந்த சட்டத்தின் மூலம் பெறமுடியும்.

    பொது மக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப் படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ் களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும். ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல் தொடர வேண்டும் என்பதற்காகவே இச்சட் டத்தை கொண்டு வர தமிழக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் இனியும் இத்தகைய சூழல் நிலவுவதை அனுமதிக்க முடியாது. எனவே, நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #ramadoss #pmk #RegistrationDepartment

    Next Story
    ×