search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முழுவதும் நர்சுகள் நடத்தும் 8,706 ஆஸ்பத்திரிகள் - நோயை கண்டறிய பரிசோதனை
    X

    தமிழ்நாடு முழுவதும் நர்சுகள் நடத்தும் 8,706 ஆஸ்பத்திரிகள் - நோயை கண்டறிய பரிசோதனை

    கிராமப்புற மக்கள் காய்ச்சல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோயிகளுக்கு முழு நேரம் சிகிச்சை பெற வசதியாக 8,706 துணை காதார நிலையங்களில் மேலும் ஒரு செவிலியரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. #nurse
    சென்னை:

    நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    காய்ச்சல், ரத்தகொதிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் கிராம மக்கள் நகரங்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்ற காரணத்தால் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1806 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஒரு டாக்டர் மற்றும் ஒரு நர்சு வீதம் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர 8706 துணை சுகாதார மையங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு கிராம செவிலியர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் அந்தந்த கிராமங்களில் வீடு வீடாக சென்று காலை முதல் மாலை வரை மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள். அவ்வாறு செல்லும் போது துணை சுகாதார மையங்கள் பூட்டப்பட்டு இருக்கும்.

    இதனால் சுகாதார மையத்துக்கு நேரில் வரக் கூடியவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில்லை என்ற குறை நீண்ட காலமாக இருந்து வந்தது.

    இந்த மையங்களில் உள்ள ஒரே ஒரு கிராம செவிலியர்கள் வீடுகளுக்கு சென்று மருத்துவ உதவியினை வழங்கி வருவதால் மையத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நேரில் வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகும் நிலை அறிந்து அரசு புதிய மருத்துவ திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பெயர் அனைவருக்கும் நல வாழ்வு திட்டமாகும்.

    இந்த திட்டத்தின் கீழ் 8706 துணை சுகாதார மையங்களிலும் மேலும் ஒரு கிராம செவிலியர்களை நியமித்து கிராம மக்களுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. புதிதாக நியமிக்கப்படும் இவர்கள் சுகாதார மையத்தை திறந்து வைத்து அங்கு வருகின்ற மக்களுக்கு தேவையான சிகிச்சையினை அளிப்பார்கள்.

    அனைத்து தடுப்பூசிகளும், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு டாக்டரின் பரிந்துரையின்படி ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் வழங்குவார்கள். மேலும் ரத்த மாதிரி பரிசோதனை, ரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை போன்ற பரிசோதனைகளையும் கிராம செவிலியர்கள் மேற்கொள்வார்கள். இது தவிர கர்ப்ப கால பரிசோதனை, விபத்து முதல் உதவி போன்றவற்றிற்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    அனைவருக்கும் நல வாழ்வு திட்டம் தமிழகத்தில் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 3 பிளாக்களில் பரீட்சார்த்தமாக தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் மேலும் 39 பிளாக்களில் தொடங்கப்பட உள்ளது. 5 வருடத்தில் 8706 துணை சுகாதார மையங்களிலும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இது குறித்து பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-


    அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் இதனை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி கிராம செவிலியர்கள் 8706 பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.

    துணை சுகாதார மையங்களில் ஏற்கனவே ஒருவர் இருந்த நிலையில் கூடுதலாக ஒருவர் நியமிக்கப்பட்டு அந்த மையங்களை முழுமையாக திறந்து வைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

    இதுவரையில் மூடி இருந்த துணை சுகாதார நிலையங்கள் இனி படிப்படியாக திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் சுகாதார மையங்களுக்கு நேரில் சென்றாலே ஊசி, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இங்கு செய்யலாம். இத்திட்டம் 2022-23-ல் நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #nurse
    Next Story
    ×