search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் பங்கேற்பு

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் நந்தனத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். #MGRCenturyFestival #ADMK

    சென்னை:

    நந்தனத்தில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்.

    முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது.

    சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ் நாடு 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கு சபாநாயகர் பி.தனபால் தலைமை வகிக்கிறார். முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிடுகிறார்.

    தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடை பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து காசோலை, பாராட்டு சான்றிதழ், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விழா பேருரையாற்றுகிறார்.

    விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆருடன் சினிமா துறையில் பயணித்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

    விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் பேசுகிறார்கள்.

     


    சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல், சேர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி அண்ணா சாலை முழுவதும் வாழை மரங்கள், தோரணங்கள், அலங்காரங்கள், பேனர்கள் அமைக்கப்பட்டு சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்காக போலீசார் சார்பில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    வாகன நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து வரும் அ.தி.மு.க.வினர் பஸ்கள், வேன்கள், கார்கள் கிண்டி தொழிற் பேட்டை பகுதியிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவுத் திடல், சுவாமி சிவானந்தா சாலை, கடற்கரை இணைப்பு சாலை ஆகிய இடங்களில் நிறுத்தப்பட வசதி செய்யப்பட்டுள்ளது.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், ஐ.டி.பி.எல். மைதானம் ஆகிய இடங்களில் நிறுத்தப்படுகிறது.

    தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும், சி.பி.டி. வளாகத்திலும் நிறுத்தப்படும்.

    விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒய்.எம். சி.ஏ. ராணுவ மைதானம், டாக்டர் எம்.ஜி.ஆர். பல் கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களில் நிறுத்தலாம்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #MGRCenturyFestival #ADMK

    Next Story
    ×