search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து ரூ. 1½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கொள்ளை
    X

    செஞ்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து ரூ. 1½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கொள்ளை

    செஞ்சி அருகே பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். அந்த அறையில் போடப்பட்டுள்ள பூட்டுகளை கடப்பாரையால் உடைத்தனர்.

    பூட்டை உடைத்ததும் அவர்கள் உள்ளே சென்றனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை எடுத்து சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்பு அவற்றை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை 530 மணிக்கு பூசாரி சந்திரன் கோவில் நடை திறப்பதற்காக வந்தார். அப்போது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து அந்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையறிந்ததும் கிராம மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்றனர். அந்த அறையில் இருந்த மல்லிநாதர்-கீர்த்தகரர், தர்மேந்தர், பத்மாவதி, ஜோலாம்பாள், பாசுவநாதர் உள்பட 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருந்தன.

    கொள்ளை போன சாமி சிலைகளின் மதிப்பு ரூ.1½ கோடியாகும். மேலும் இந்த கோவிலில் இருந்த 29 சிலைகள் பத்திரமாக உள்ளன. இதனால் பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் தப்பின.

    இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    கோவிலில் சாமி சிலைகள் திருட்டுப்போன அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது.


    மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர். கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×