search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சோதனையை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    பதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சோதனையை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். #ADMK #GutkhaScam #MinisterVijayabaskar
    தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

    ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை வெளியிடவில்லை என்று புகார் கூறப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது.

    இந்த இடைத்தேர்தலில் பணப்பட்டு வாடா மிகப் பெரிய அளவில் நடப்பதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பணப்பட்டு வாடா தொடர்பாக அமைச்சர்கள் பெயருடன் பண விநியோக பட்டியல் கைப்பற்றப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்குவாரிகளில் தொடர்ச்சியாக பலமுறை சோதனை நடத்தப்பட்டது.

    அடுத்து குட்கா ஊழல் தொடர்பாக சிக்கிய ரகசிய டைரியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்று இருந்தது. இதனால் அவரது வீட்டில் இன்று மீண்டும் சி.பி.ஐ. சோதனை நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    முன்பு பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இப்போது ஊழல் புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். புகார்கள் வெளியானதுமே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அமைச்சர் பதவி விலக மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MinisterVijayabaskar
    Next Story
    ×