search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவையாறு:

    தஞ்சை அருகே உள்ள மணக்கரம்பையைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் ஸ்டாலின்ராஜ் (வயது27). கூலி தொழிலாளி.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் இளையராஜா (26).

    இந்நிலையில் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தஞ்சை கடை வீதிக்கு வந்திருந்தனர். பின்னர் கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு மணக்கரம்பைக்கு திரும்பினர். அப்போது மணக்கரம்பையை நோக்கி அம்மன்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே தஞ்சையை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின்ராஜ், மற்றும் இளையராஜா பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தஞ்சை நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×