search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகளை வைக்க போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் தகவல்
    X

    விநாயகர் சிலைகளை வைக்க போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் தகவல்

    விநாயகர் சிலை வைப்பது, கரைப்பது, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி அலுவலத்திற்குட்பட்ட துடியலூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. அப்போது பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதனையொட்டி பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் விநாயகர் சிலை வைப்பது, கரைப்பது, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி மணி பேசும்போது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீசாரிடம் முன்அனுமதி பெற வேண்டும். வைக்கக்கூடிய சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளாக இருக்க வேண்டும். ரசாயன கலவையால் தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்கக்கூடாது.

    மேலும் சிலைகளை வைப்பவர்களே கமிட்டி அமைத்து அவற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் சிலை அருகில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் 10 பேர் கொண்ட குழு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் போதிய லைட் வெளிச்சம் இருக்க வேண்டும். தீ தடுப்பு பாதுகாப்புகள் செய்து இருக்க வேண்டும்.

    பிற மதத்தினர் புண்படும் வகையில் சுவரொட்டிகளோ, கோ‌ஷங்களோ போடக்கூடாது. ஊர்வலத்தை அனுமதித்த நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். போலீசார் அறிவிக்கும் நாட்களில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். துடியலூர், தடாகம், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வெள்ளகிணர் குட்டையிலும், காரமடை பகுதி விநாயகர் சிலைகள் பத்ரகாளியம்மன் குளத் திலும், மேட்டுப்பாளையம் பகுதி விநாயகர் சிலைகள் பவானி ஆற்றிலும், சிறுமுகை பகுதி விநாயகர் சிலைகள் பழத்தோட்டம் ஆற்றிலும் கடந்து ஆண்டு போல இந்த ஆண்டும் கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்தி தர போலீசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கோட்ட பொறுப்பாளர் உருவை பாலன் மற்றும் இந்து முன்னணியினர், இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பாரத் சேனா, விஷ்வ இந்து பர்‌ஷத், அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×