search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர்- அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை
    X

    ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர்- அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை

    ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் கண்மாய்கள், ஊரணிகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழை இல்லாததால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் கட்டாந்தரையாக காட்சி அளிக்கின்றன.

    குடிக்கக்கூட தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வரும் நிலை உள்ளது. நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகளும், பறவைகளும் குடிக்க தண்ணீர் இல்லை.

    3 பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் பெரும்பாலும் உப்புத் தண்ணீரே கிடைத்து வருகிறது.

    முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதி களிலுள்ள ஆறுகள், கண்மாய், குளங்கள், வரத்து கால்வாய்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மண்மேடுகளால் தண்ணீர் செல்ல முடியாமலும், தேக்க முடியாமலும் மழைநீர் வீணாகி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கலெக்டர் ஆயிரத்து 100 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகையில் இருந்து திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    ராமநாதபுரத்திற்கு வைகை தண்ணீர் கிடைக்க அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உணர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வைகை அணையில் இருந்து 1800 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்து விட பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசு ஆணை விரைவில் வெளியிடப்பட்டு ராமநாதபுரத்திற்கு விரைவில் வைகை தண்ணீர் வந்தடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×