search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மனு
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் மனு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். அப்போது உடன்குடி வட்டார விவசாயிகள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் நலச்சங்க தலைவர் தினகரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    எங்கள் பகுதி விவசாய பகுதியாகும். நாங்கள் விவசாயத்து பிரதான உரமான டி.ஏ.பி. உரத்தை பயன்படுத்தி வருகிறோம். தற்போது உரம் தட்டுப்பாட்டால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பியூரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட் ஆகியவைகள் ஸ்பிக் நிறுவனத்துக்கு கிடைக்காததால் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது தான்.

    ஸ்டெர்லைட் ஆலை எங்கள் விவசாயத்துக்கு கால்வாய் சுத்தம் செய்தல், குளம் தூர்வாருதல், வண்டல் மண் அடித்து கொடுத்தல் மற்றும் நிறைய பராமரிப்பு பணிகளை பல கோடி ரூபாய்களுக்கு செய்து தருகிறார்கள். எங்கள் பகுதி இளைஞர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்து வந்தனர். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை. பல கஷ்டங்களில் இருக்கும் எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

    தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் முழு உருவ வெண்கல சிலை உள்ளது. இந்த சிலை மற்றும் பீடம் சற்று உயரமாக இருப்பதால், மகாத்மா காந்தியின் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சிரமம் ஏற்படுகிறது. எனவே காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வசதியாக அங்கு ஒரு நிரந்தர படிக்கட்டு ஏணி அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். #sterlite
    Next Story
    ×