search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது - அமைச்சர் உதயகுமார்
    X

    காவிரியில் வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது - அமைச்சர் உதயகுமார்

    காவிரி நதி நீர் கால்வாய்களில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடக்கூடாது அமைச்சர் உதயகுமார் கூறினார். #MinisterUdayakumar #Cauveryflood
    சென்னை:

    அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய நீர்வள ஆணையம் கடந்த 9-ந்தேதி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் எனவும், காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

    அதனை தொடர்ந்து காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையில் குழந்தைகள் குளிக்கவும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை உயரம்-120.2 அடி, கொள்ளளவு- 93.79 டி.எம்.சி, வினாடிக்கு 1,30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து-வினாடிக்கு 1,35,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே 13 மற்றும் 14-ந்தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterUdayakumar #Cauveryflood


    Next Story
    ×