search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
    X

    டெல்டா மாவட்டங்களில் மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

    டெல்டா மாவட்டங்களில் மழை நீரை சேமிக்க தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    கர்நாடகாவில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை கால்வாய்க்கு வந்து அங்கிருந்து மற்ற ஆறுகளுக்கு பிரித்து விடப்படுகிறது.

    ஆறுகளுக்கு திருப்பி அனுப்பியது போக உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் பெரும்பாலும் தடுப்பணைகள் இல்லாமல் கடலில் தான் போய் கலக்கிறது.

    முன்பு தமிழகத்தில் அதிகளவு மழை பெய்தது. இதனால் தண்ணீர் அதிகளவு சேமிப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் தண்ணீர் இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்கள் வறட்சியில் சிக்கின. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தற்போது வரும் தண்ணீரை கடலுக்கு அனுப்பாமல் தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணைகளை கட்டி அதற்கான கட்டமைப்புளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மேலணைக்கும், கீழணைக்கும் இடையில் கோவிலடி சுக்காம்பார், வைத்தியநாதன் பேட்டை, தேவன்குடி, கருப்பூர்புத்தூர், கூகூர், குடிதாங்கி, திருவைகாவூர் ஆகிய இடங்களில் கதவணைகள் அமைத்தால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் கொள்ளிடத்தின் இரு கரைகளுக்கும் அருகில் உள்ள சுமார் 2.40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நிரந்தரமாக பாசன வசதி கிடைக்கும்.

    மேலும் கும்பகோணத்தை அடுத்த அணைக்கரையில் உள்ள கீழணையின் அருகே ஆதனூர், குமாரமங்கலம் பகுதியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு அதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    அணைக்கரையில் கீழணை வடக்கு பிரிவில் 30 கண்மாய்களும், தெற்கு பிரிவில் 40 கண்மாய்களும் உள்ளன. இந்த கண்மாய்கள் வழியாக வடக்கு ராஜன் வாய்க்கால் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் தடுப்பணைகள் இல்லாததாலும், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும் பாசன தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் கடலுக்கு சென்று விடுகிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×