search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு
    X

    பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணையாக பரம்பிகுளம் அணை விளங்குகிறது. 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருவதால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71½ அடியாக உயர்ந்தது.

    தற்போது அணையில் 17 ஆயிரத்து 670 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் உயர்ந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நேற்று இரவு உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை உபரிநீர் திறப்பு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கேரளாவில் உள்ள பெருங்கல்குத்து என்ற அணைக்கு செல்கிறது. அந்த அணை நிரம்பிய பின்பு உபரிநீர் திருச்சூர் சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதேபோல் ஆழியாறு அணை 117 அடியை எட்டியது. இதனால் 2-வது முறையாக நேற்று மாலை மதகுகள், பைபாஸ், மின் உற்பத்தி நிலையம், கால்வாய்கள் வழியாக மொத்தம் 2140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், உபரிநீர் வெளியேற்றுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆழியாற்றங் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×