search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் வீட்டில் 4 ஆர்டர்லிகள் பணி செய்கின்றனர்- ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
    X

    ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் வீட்டில் 4 ஆர்டர்லிகள் பணி செய்கின்றனர்- ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

    ஆர்டர்லி முறை தமிழகத்தில் ஒழிக்கப்பட்டு விட்டதாக டி.ஜி.பி. பொய் சொல்வதாகவும், ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் இப்போதும் ஆர்டர்லிகளாக 4 போலீஸ்காரர்கள் பணி செய்கின்றனர் என்றும் ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.
    சென்னை:

    போலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பான வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக டி.ஜி.பி. பதில் மனுவை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். ஆனால், சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வுபெற்ற கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் வீட்டில் இப்போதும் 4 போலீஸ்காரர்கள் ‘ஆர்டர்லி’ வேலை செய்கின்றனர் என்று கூறி பெயர், புகைப்பட ஆதாரத்துடன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், போலீஸ்காரர்களுக்கு வார விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவுக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக போலீசாருக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? இதில் வித்தியாசம் உள்ளதா? அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை வழங்குவது போல, போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறையும், மற்றொரு நாள் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியமும் வழங்கினால் என்ன? இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு விசாரணையின்போது, அண்மையில் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதற்கு முந்தைய ஆட்சியில், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கைதியை அமைச்சர் நேரில் சென்று பார்த்த சம்பவம் நடந்தது. அரசியல்வாதிகள், இதுபோன்று ரவுடிகளை ஊக்குவிப்பதால் தான் சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். 
    Next Story
    ×