search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
    X

    போலீசாரும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

    போலீசாரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். #Helmet #Seatbelt
    சென்னை:

    சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான்.

    2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் விபத்தில் 4,091 பேர் இறந்துள்ளனர். அதன்பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது.

    மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் ஆகிய இருவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். அதேபோல காரில் டிரைவர் மட்டுமல்ல, பக்கவாட்டில், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் என்று அனைவரும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும்.

    இந்த சட்ட விதிகளை போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்றினால் விபத்தில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் குறையும். அதனால், இந்த சட்டப்பிரிவையும், விதிகளையும் தீவிரமாக அமல்படுத்தக்கோரி போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் கடந்த மார்ச் 29-ந்தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கூறியதாவது:-

    ஹெல்மெட் சட்டத்தை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதால் 2017-ம் ஆண்டு வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விபத்தில் மனித உயிர் பலியாகவில்லை என்ற நிலை வரவேண்டும் என்று மனுதாரர் நினைக்கிறார்.

    இதற்காக போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    கேரளாவில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள், நீதிபதி வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமீறியதாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ்காரர்களும் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். கார்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் போலீஸ் அதிகாரிகள் செல்கின்றனர்.

    இதுபோன்ற நிலை மாறவேண்டும். போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்டும்’, ‘சீட் பெல்ட்டும்’ அணிந்துகொண்டு தான் மோட்டார் வாகனங்களை ஓட்டவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கூடுதல் அரசு பிளடர் இ.மனோகரன், இந்த சட்டத்தையும், விதிகளையும் போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்துகின்றனர். அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்துகின்றனர் என்று கூறினார்.

    தற்போது நவீன வாகனங்களில் முகப்பு விளக்கின் வெளிச்சம் அதிகமாக உள்ளது. அந்த முகப்பு விளக்கில் கருப்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படுவது இல்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது.

    புதிதாக தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் பகல் நேரங்களில் முகப்பு விளக்கு எரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை இயக்கியவுடன் தானாக முகப்பு விளக்கு எரிவதுபோல புதிய வண்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட விளக்குகளில் பொருத்தப்படும் பல்புகள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும்.

    ஆனால், சிலர் சந்தையில் இருந்து கலர் கலராக எல்.இ.டி. பல்புகளை வாங்கி முகப்பு விளக்கில் பொருத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இதுதொடர்பாக எடுத்துள்ள, இனி எடுக்கப்போகின்ற நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் வருகிற 27-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 
    Next Story
    ×