search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி, திருத்தங்கலில் தொடரும் வெறிநாய்கள் தொல்லை - ஒரே நாளில் 19 பேர் காயம்
    X

    சிவகாசி, திருத்தங்கலில் தொடரும் வெறிநாய்கள் தொல்லை - ஒரே நாளில் 19 பேர் காயம்

    சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் வெறிநாய்கள் தொல்லை உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் நாய்கள் கடித்து 19 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது நாய்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் சுற்றி திரிகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி-விஸ்வத்தம் ரோட்டில் குப்பையில் கொட்டப்பட்ட கழிவுகளை சாப்பிட வந்த நாய்களுக்குள் மோதல் ஏற்பட்டு அந்த பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த சிறுமி, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

    இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் 19 பேரை நாய்கள் துரத்தி, துரத்தி கடித்துள்ளன. செவல்பட்டியை சேர்ந்த முத்துவீரன்(வயது 50) என்பவர் சிவகாசி பிச்சாண்டி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவரை நாய் கடித்துள்ளது. அதேபோல் சிவகாசி நகராட்சி துப்புரவு தொழிலாளி கணேசன்(49) என்பவரை பிச்சாண்டி தெருவில் உள்ள நாய்கள் கடித்து காயப்படுத்தி உள்ளது. திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சங்கீதாவை பள்ளி வளாகத்தின் உள்ளே புகுந்த வெறிநாய் கடித்துள்ளது. காயம் அடைந்த மாணவி சங்கீதா சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதேபோல் முத்துமுனியப்பன்(25), சுதாகர்(47), பரமகுரு(35), பாண்டியராஜன்(31), குமார்(40), முத்துலட்சுமி(63), தங்கேஸ்வரி(18), தமிழ்செல்வி(45) உள்பட 19 பேர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாய்களால் பொதுமக்கள் அதிக அளவில் பாதித்து வருகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை போடவும், வெறிநாய்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×