search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசு பள்ளியில் மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு- நாராயணசாமி அறிவிப்பு
    X

    புதுவை அரசு பள்ளியில் மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்பு- நாராயணசாமி அறிவிப்பு

    புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம், சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த திருபுவனை சன்னியாசி குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.32 லட்சம் செலவில் நவீன வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதோடு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு அறைகள், அனைத்து வகுப்பறைகளிலும் மின் விசிறிகள், தேசிய கொடிக்கு தனி கொடி மேடை, விழா மேடை, புதிய கரும்பலகைகள் என பள்ளி முழுவதும் புதிதாக புனரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    பள்ளியின் புதிய கட் டிட திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் நாராயண சாமி திறந்து வைத்து பேசினார்.

    புதுவையில் அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி, போட்டு தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மாணவர் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.


    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 60 பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்படும். புதுவையில்-40, காரைக்காலில்-20 ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்படும்.

    அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில், அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை இயக்குனர் குமார், முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையாளர் சீத்தாராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #Congress #Narayanasamy
    Next Story
    ×