search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்தூர் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
    X

    குளத்தூர் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

    விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டன. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது.

    இதேபோல விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 26-ந்தேதி மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் போலீஸ் நிலைய தகவல் பலகை சேதமானது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் குளத்தூர் அண்ணாநகர் காலனி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த ராஜ்(19), கீழதெருவை சேர்ந்த சிவக்குமார்(25) ஆகியோர் என்பதும், குளத்தூர் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது அவர்கள்தான் என்றும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ’குளத்தூர் போலீசார் அடிக்கடி வாகன சோதனை என்ற பெயரில் எங்களை வழிமறித்ததால் போலீசாரை பழிவாங்கும் நோக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசினோம்’ என்று தெரிவித்தனர்.

    எனினும் தூத்துக்குடி போராட்டத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைதான 2 பேரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    Next Story
    ×