என் மலர்
செய்திகள்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கோவிலுக்கு இடம் கொடுக்காத விவசாயி குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
வேலூரில் கோவிலுக்கு நிலம் கொடுக்காத காரணத்தால் கட்ட பஞ்சாயத்து கும்பல் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி புகார் அளித்துள்ளார்.
வேலூர்:
காட்பாடியில் கோவிலுக்கு இடம் தராத விவசாயி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காட்பாடி அருகே உள்ள சென்றாயன் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்தன் (வயது 70). இவர் இன்று தன்னுடைய மனைவி, மகன், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்து ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், எங்கள் ஊரில் கோவில் கட்டுவதற்கு என்னுடைய இடத்தை தானமாக கேட்டனர். கோவிலுக்கு இடம் தராததால், கட்டப்பஞ்சாயத்து கும்பல் என்னை குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
நானோ, என் குடும்பத்தாரோ ஊரில் யாரிடமும் பேசக்கூடாது. அப்படி மீறி வாய் திறந்து பேசினால் உடனே ரூ.5 ஆயிரம் அபராதம் போடுகின்றனர். என்னுடைய விவசாய நிலத்திற்கு வீதி வழியாக நாங்கள் செல்லக் கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து கும்பல் உத்தரவிட்டுள்ளனர்.
எங்களை நிம்மதியாக வாழவிட மறுக்கின்றனர். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
சத்துவாச்சாரியை அல மேலுமங்காபுரத்தை சேர்ந்த இருளர் சமூகத்தினர் தங்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், அல மேலுமங்காபுரத்தில் இருளர் சமூகத்தின் 32 குடும்பங்கள் வசிக்கிறோம்.
எங்களின் 23 குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஓராண்டுக்கு முன்பே விண்ணப்பித்தோம். ஆனால் இதுவரை சாதி சான்றிதழ் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உதவி கலெக்டரை சந்தித்து சாதி சான்றிதழ் கேட்டு முறையிட வந்தோம் என்றனர்.
Next Story






