search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுச்சூழல், வனத்துறை மானிய கோரிக்கை விவாதம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் எழுப்பிய கேள்விகள்
    X

    சுற்றுச்சூழல், வனத்துறை மானிய கோரிக்கை விவாதம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் எழுப்பிய கேள்விகள்

    தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் சுற்றுச்சூழல், வனத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. #TNAssembly #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டசபை மானிய கோரிக்கை விவாதம் தொடர்பாக எங்கள் சிற்றாய்வு மற்றும் மய்யம் விசில் செயலியின் மூலம் கிடைக்கப்பெறும் கேள்விகள் மற்றும் தகவல்களை ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக அரசு மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பார்வைக்கு மக்கள் நீதி மய்யம் முன்வைக்கும்.

    பொறுப்பான எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை விவாதத்தின்போது இந்த கேள்விகளை எழுப்பி மக்களின் நலனுக்காக கடமை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். 29-ந்தேதி (இன்று) நடைபெற உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கேள்விகள் வருமாறு:-

    * குரங்கணி தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு பின்னர் பொழுதுபோக்குக்காக மலை ஏறுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஏதேனும் கொள்கைகள் இருக்கிறதா?


    * வனப்பகுதிகளில் காட்டுத்தீ போன்ற ஆபத்துகளை உடனடியாக அறிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் தெர்மல் சென்சார் போன்ற கருவிகள் வனத்துறையால் வாங்கப்பட்டிருக்கிறதா?

    * கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கடலோர பகுதியான தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கும், பல லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் பெரும் சவாலாகவும், ஆபத்தாகவும் மாற உள்ளது என்ற துறைசார்ந்த வல்லுனர்களின் கேள்விகளுக்கு தமிழக அரசின் விளக்கம் என்ன?

    * ஏப்ரல் 6-ந்தேதி வரை இதுகுறித்து கேள்விகள் கேட்கலாம் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில் என்னென்ன கேள்விகள் அரசுக்கு வந்தது? அந்த கேள்விகளுக்கு பதில் என்ன என்பதை தமிழக அரசு சட்டமன்றத்தில் அளிக்கவேண்டும்.

    * வெள்ளத்தினை காரணம் காட்டி கூவம் மற்றும் அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகளை அகற்றும் அரசு, கொசஸ்தலை ஆற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் காட்டுவது ஏன்?

    * ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் ஆறுகளும் இதர நீர்நிலைகளும் மாசுபடுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகள் என்ன?

    * மழை நீரினை பாதுகாக்கவும் நிலத்தடி நீரினை மேம்படுத்துவதற்கும் பண்ணைக்காடுகளில் 60 பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.3 கோடி நிதியில் எங்கெங்கு பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமும், அதன் பயன்பாடு தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற விவரமும் சட்டசபையில் அளிக்கப்படவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #KamalHaasan #MakkalNeedhiMaiam #TNAssembly
    Next Story
    ×