search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    ராம்ஜிநகர் ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அந்தப்பகுதி பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்த நிலையில், வேப்பந்தட்டை தாலுகா திருவாளந்துறையில் உள்ள ராம்ஜி நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரேஷன் கடை ஒன்று திறக்கப்பட்டு வாரத்தில் 3 நாட்கள் செயல்பட்டு வந்தது. இதனால் எங்கள் பகுதியில் இருந்து 205 குடும்ப அட்டைதாரர்கள் அங்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், இந்த மாதம் அந்த ரேஷன் கடைக்கு வரவேண்டிய எந்த ரேஷன் பொருட்களும் வரவில்லை. இதனால் கடை திறக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாளந்துறைக்கு சென்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றோம்.

    எனவே ராம்ஜி நகரில் உள்ள ரேஷன் கடைக்கு தேவையான ரேஷன் பொருட்களை இறக்கி, வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிழக்கு ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊத்தங்கால் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடை திறந்தால் அந்த கடை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 182 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்த கலெக்டர் குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
    Next Story
    ×