search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குலசேகரத்தில் 2 பெண்களை விரட்டி, விரட்டி கடித்த வெறிநாய்
    X

    குலசேகரத்தில் 2 பெண்களை விரட்டி, விரட்டி கடித்த வெறிநாய்

    குலசேகரத்தில் 2 பெண்களை வெறிநாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

    குலசேகரம்:

    குலசேரகம் அரசமூடு விளையாட்டு மைதானம் பகுதியில் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த கழிவுகளை உண்பதற்காக இந்த பகுதியில் ஏராளமான நாய்கள் இங்கு சுற்றித்திரிவது வழக்கம். இவற்றில் பல நாய்கள் வெறிபிடித்து அலை கின்றன. மேலும் இந்த வெறி நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் சென்றாலும் இதுவரை அந்த வெறி நாய்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் இந்த வெறி நாய்கள் கடித்து 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குலசேகரம் காவஸ்தலம் தொட்டிப்பாலம் செட்டி தெருவை சேர்ந்தவர் கீதாமணி (வயது 60). இவர் தொட்டிப்பாலம் பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த ஒரு வெறி நாய் அவரை விரட்டி, விரட்டி கடித்தது.

    இதில் அவருக்கு கை உள்பட உடலில் பல இடங் களில் படுகாயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து வெறி நாயிடம் இருந்து அவரை காப்பற்றினார்கள். அங்கிருந்து தப்பியோடி அந்த வெறி நாய் அதே பகுதியை சேர்ந்த வசந்தா (65) என்ற பெண்ணையும் கடித்து குதறியது. மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்களையும் அந்த வெறி நாய் கடித்தது.

    வெறி நாயின் அட்டகாசத்தை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நாயை அடித்து கொன்றனர். வெறி நாய் கடித்த பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    சாலையில் திரிந்த நாய்களும் வெறி நாயால் கடிக்கப்பட்டுள்ளதால் அந்த நாய்களும் வெறி நாய்களாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் விளையாட்டு மைதானம் பகுதியிலும் பல வெறி நாய்கள் சுற்றித்திரிவதால் இவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வெறி நாய்களை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×