search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட புதிய பாட திட்ட புத்தகங்கள் தரமானது - எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்
    X

    சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட புதிய பாட திட்ட புத்தகங்கள் தரமானது - எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்

    1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். #SchoolSyllabus #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது.

    மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் பாடத் திட்டங்களை தரம் உயர்த்தி அமைக்க உத்தரவிட்டார். மேலும், மாநில கல்வித் திட்டத்தில் புதிய தரமான பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தார்.

    அதோடு, மக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறியவும் ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தார். இது இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய முயற்சியாகும். அந்த வகையில் முதலில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தரமான புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது.

    அதன் வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு புத்தகமாக அச்சிடப்பட்டு உள்ளது. அந்த புத்தகங்களை 4-ந் தேதி சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.

    இதுகுறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வெளியிடப்பட இருக்கும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம், மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ.யை விட தரமானதாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே புதிய முயற்சியாக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அன்றாட இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அறிவை வளரச் செய்யும்.

    முதலாம் வகுப்புப் பாடத்தில், நில மேலாண்மை, நீர் மேலாண்மை, வெப்ப மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, தேசப்பற்று ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள், அடுக்குமாடிகள் கட்டப்படும்போது எந்த வகையிலான மணல் மற்றும் இடங்களில் கட்ட வேண்டும் என்பது பற்றிய கல்வி அறிவை நில மேலாண்மை அளிக்கும்.

    வெள்ளம், சுனாமி வரும்போது எப்படிப்பட்ட பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு அம்சங்களைப் பற்றி நீர் மேலாண்மை கல்வி போதிக்கும். அதுபோலவே வெப்ப மேலாண்மை, உள்ளிட்ட மற்ற பாடத் திட்டங்களும் புதிய அறிவை மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும். எனவே இதுபோன்ற கல்வித் திட்டம் மூலம் தரமான அறிவைக் கொண்ட மாணவ, மாணவிகளை தமிழகத்தில் உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SchoolSyllabus #EdappadiPalanisamy #tamilnews
     
    Next Story
    ×