search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை
    X

    டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை

    டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.#ttvdhinakaran #supremecourt
    புதுடெல்லி:

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் ஆணையம் “குக்கர் சின்னம்” ஒதுக்கி கொடுத்து இருந்தது.

    ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு அமோக வெற்றி கிடைத்தது. அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தையும், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டு குக்கர் சின்னம் இந்த வெற்றியை தேடிக் கொடுத்து இருந்தது. இதனால் குக்கர் சின்னத்தை டி.டி.வி.தினகரனும், அவரது ஆதரவாளர்களும் தங்களுக்கு மிகவும் ராசியான சின்னமாக கருதினார்கள்.

    இந்நிலையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியானதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக பெறுவதற்கு டி.டி.வி.தினகரன் முடிவு செய்தார்.

    குக்கர் சின்னத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இந்தியாவில் வேறு யாருக்காவது குக்கர் சின்னம் அதிகாரப்பூர்வமான சின்னமாக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு எந்த கட்சியும் குக்கர் சின்னத்தை பயன்படுத்தவில்லை என்று டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ரேகாபாலி, “குக்கர் சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே குக்கர் சின்னம் கிடைத்ததால் உற்சாகம் அடைந்த டி.டி.வி. தினகரன் கடந்த 15-ந்தேதி மதுரையில் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும்போது குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, மதுசூதனன் ஆகியோர் சார்பில் அந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அப்பீல் மனுவில், “தினகரன் சுயேட்சை ஆவார். அவர் அரசியல் கட்சி கூட தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது அவருக்கு பொதுவான சின்னமாக குக்கர் சின்னத்தை வழங்கும்படி தேர்தல் கமி‌ஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு எப்படி உத்தரவிட முடியும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறி இருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடந்த சில தினங்களாக சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வந்தது. டி.டி.வி.தினகரன் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தார். இன்று (புதன்கிழமை) இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட்டது.

    நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “டி.டி.வி.தினகரன் அணிக்கு குக்கர் வழங்கும்படி தேர்தல் கமி‌ஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டதை ஏற்க இயலாது. எனவே அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

    சுப்ரீம்கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக டி.டி.வி.தினகரனும், அவரது ஆதரவாளர்களும் இனி குக்கர் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது டி.டி.வி.தினகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையே வழக்கு உள்ளது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நிலுவையில் போடப்பட்டுள்ளது.

    இந்த இரட்டை இலை சின்னம் வழக்கிலும் 3 வாரத்துக்குள் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதை தீர்மானிக்க டெல்லி ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

    2 நீதிபதிகள் பெஞ்ச் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு கூறி உள்ளது. இந்த வழக்குக்காக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் அணியினர் கூடுதலாக எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    எனவே இரட்டை இலை சின்னம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. 3 வாரத்துக்குள் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கூறி இருப்பதால் அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பதற்கும் விடை கிடைத்து விடும். #ttvdhinakaran #supremecourt
    Next Story
    ×