என் மலர்
செய்திகள்

கடலூர் அருகே பெண்ணை அடித்துக்கொன்று ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
பண்ருட்டி:
கடலூர் அருகே உள்ள புதுப்பேட்டை கள்ளான் குட்டை புதுநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி, இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 82).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி இறந்து விட்டார். சின்னப் பொண்ணு அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் அருகில் பெட்டிக்கடைக்கு சென்று வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அவர் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு மர்ம மனிதர்கள் சின்னப் பொண்ணு வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்பு அவர்கள் சின்னப் பொண்ணுவின் கை, கால்களை கயிற்றால் கட்டினர். பின்னர் அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை திணித்தனர். அதன் பின்பு அவரை அடித்து கொலை செய்துவிட்டு அவர் வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகளையும், ரூ.1½ லட்சம் பணத்தையும் மொத்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்று விட்டனர்.
இன்று காலை சின்னப் பொண்ணு வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சின்னப்பொண்ணு கைகள் கயிற்றால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் தகவல் அறிந்ததும் அதே பகுதியில் உள்ள சின்னபொண்ணுவின் உறவினர் சிவக்குமார் அங்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பிணமாக கிடந்த சின்னபொண்ணு உடலை பார்வையிட்டார்.
அதன்பின்பு அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ் பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் சவ்வாது உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டுக்குள் பிணமாக கிடந்த சின்னப்பொண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த கொலையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து வெளியே சென்று ஓடி நின்றது.
அதேபோல் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த கொலை தொடர்பாக 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews






