என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
ஈரோடு:
ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து முதல் வீதியை சேர்ந்த மூதாட்டி ராஜாமணி (வயது 65). இவர் இன்று அதிகாலை சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். காய்கறி வாங்கி விட்டு வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.
நசியனூர் ரோடு ஒற்றைப்பனை மரப்பகுதியில் சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் ராஜாமணி அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத ராஜாமணி திருடன்... திருடன்... என்று சத்தமிட்டார்.
அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. எனவே ராஜாமணியின் சத்தம் கேட்டு அங்கு யாரும் உடனே வரவில்லை.
ஆட்கள் வருவதற்குள் ராஜாமணியிடம் நகை பறித்த மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ராஜாமணி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.






