search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
    X

    தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

    தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. அது இன்று காலை 8.30 மணிக்கு கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்க கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

    அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை கடந்து கன்னியாகுமரி கடல் பகுதிக்கு வருகிறது. இதனால் 2 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

    வட தமிழகத்தை பொறுத்த வரை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    கடலில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திற்கு காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 7 செ.மீ.மழை பெய்துள்ளது. ராமேசுவரம்-6 செ.மீ, தரங்கம்பாடி-5 செ.மீ, மயிலாடுதுறை-4 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.

    Next Story
    ×