search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பத்தூரில் வயதான கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை
    X

    அம்பத்தூரில் வயதான கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை

    அம்பத்தூரில் வயதான கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். வீட்டின் கதவை உடைத்து இருவரின் உடலை மீட்ட போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
    அம்பத்தூர்:

    அம்பத்தூர் பாடி குப்பம் 18-வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி (67). இவரது மனைவி கோதை (58). இவர்களுக்கு ராஜ், வினோத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

    துரைசாமி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். அவர் திருமுல்லைவாயலில் உள்ள நிலத்தை விற்று 2 மகன்களுக்கும் பிரித்து கொடுத்திருந்தார்.

    துரைசாமி, கோதை இருவரும் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் வேதனையில் இருந்த அவர்கள் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடலை மீட்டனர். அப்போது துரைசாமி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், “தனக்கு கண் பார்வை மங்கி விட்டது. மனைவி சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக மகன்கள் சிகிச்சைக்கு செலவு செய்து வருகிறார்கள். அவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். வீட்டுக்கு கொடுக்கப்பட்ட முன் பணத்தை இருவரும் பிரித்துக் கொள்ளுங்கள்” என்று எழுதி வைத்துள்ளார்.

    Next Story
    ×