என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் தனியார் முந்திரிக்கொட்டை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பண்ருட்டி அருகே முத்து கிருஷ்ணாபுரம், நரிமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
இன்று காலை ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் முந்திரிக்கொட்டை தொழிற் சாலைக்கு வேலைக்கு சென்றனர். வேனை கடலூர் அருகே உள்ள குமனங்குளம் பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார்.
பண்ருட்டி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதைத் தொடர்ந்து டிரைவர் தேவராஜ் வேனை திருப்ப முயன்றார்.
அப்போது வேன் நிலைதடுமாறு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் உள்ளே இருந்த பெண்கள் கூச்சல்போட்டு அலறினர். இந்தவிபத்தில் வேனில் இருந்த பூங்கோதை, வினோதினி, ருக்மணி, தெய்வகனி, சங்கீதா, வள்ளி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






