search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமானூர் அருகே மின்மாற்றியை பழுதுநீக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    திருமானூர் அருகே மின்மாற்றியை பழுதுநீக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    திருமானூர் அருகே மின்மாற்றியை பழுதுநீக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே விழுப்பணங்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் அருகே உள்ள உப்பிலியம்மன் கோவில் அருகில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் விழுப்பணங்குறிச்சி காலனித்தெரு, சுள்ளங்குடி காலனித்தெரு, ஒத்தத்தெரு ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மின்மாற்றி பழுதானதால் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் தடைபட்டது. இதுகுறித்து மின்சார அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ஏலாக் குறிச்சி-தஞ்சாவூர் சாலையில் மின்மாற்றியை பழுதுநீக்கி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கனவே குறைவாக மின்சாரம் கிடைப்பதால் மின்சாத பொருட்களை இயக்குவதில் பெரும் சிரமம் உள்ளது. தற்போது கடந்த 3 நாட்களாக மின்சாரம் முழுவதும் தடைபட்டதால் மிகவும் அவதியடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஏலாக்குறிச்சி மின்சார வாரிய அலுவலக உதவி செயற் பொறியாளர் சேகர், வருவாய் அலுவலர் அய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் திருமானூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றி பழுது நீக்கப்படும் எனவும், அதுவரை மாற்று மின்மாற்றியில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஏலாக் குறிச்சி-தஞ்சாவூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×