search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே வழுதூர் மின் உற்பத்தி நிலையத்துக்கு காவிரி நீர் வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    ராமநாதபுரம் அருகே வழுதூர் மின் உற்பத்தி நிலையத்துக்கு காவிரி நீர் வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு

    ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் வழுதூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் வழங்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    ராமநாதபுரம்:

    வாலாந்தரவை கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வாலாந்தரவை, பட்டினம் காத்தான், பனைக்குளம், பெருங்குளம், ஆற்றங்கரை, குயவன்குடி, செம்படையார்குளம், அழகன்குளம், தேர்போகி, புதுவலசை, அத்தியூத்து, ஆகிய கிராம ஊராட்சியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்காத நிலையில் மக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனர். தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குடம் ஒன்றுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    காவிரி கூட்டு குடி நீர் தரைமட்ட தொட்டி அருகே வழுதூர் இயற்கை எரிவாயு சுழலி மின் உற்பத்தி மையத்திற்கு, தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்காக, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் புதிய தரைமட்டத் தொட்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதையறிந்த மக்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் மின் உற்பத்தி மையத்திற்கு குடிநீர் வடிகால் வாரியம் எப்படி தண்ணீர் கொடுக்க ஒப்பந்தம் செய்தனர், என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான தரைமட்ட தொட்டி, பம்பிங் ஸ்டேசன் முன்பு திரண்டு புதிய தொட்டிக்கான கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரிக்கை விடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு ராமநாதபுரம் டி.எஸ்.பி. காந்திமதிநாதன், குடிநீர் வடிகால்வாரிய பொறியாளர்கள் கணேசன், ஜெகநாதன் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தரைமட்ட தொட்டி கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகளுடன் மக்கள் சமரச பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×