என் மலர்
செய்திகள்

திருமங்கலம் அருகே ரெயில் என்ஜின் டிரைவரை தாக்கி நகை-பணம் கொள்ளை
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை ரெயில்வே கேட் அருகில் வசிப்பவர் முத்துராஜா (வயது32). இவர் ரெயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சரவணாதேவி (25) என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.
நேற்று இரவு முத்துராஜா தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் டிரவுசர் அணிந்த 7 மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.
அவர்களில் 4 பேர் வெளியே நின்றுவிட, மற்ற 3 பேரும் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அங்கு காயப்போட்டிருந்த துணிகளை முகமூடியாக அணிந்து கொண்டு வீட்டின் கதவை உடைத்தனர்.
திடுக்கிட்டு எழுந்த முத்துராஜா கதவு அருகே சென்றார். கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் முத்துராஜாவை சரமாரியாக தாக்கினர்.
இதை தடுத்த அவரது மனைவி சரவணாதேவியையும் தாக்கினர். பின்னர் அவரையும், 2 குழந்தைகளை யும் கத்திமுனையில் மிரட்டி கொள்ளையர்கள் பீரோவை திறந்து பார்த்தனர்.
அதில் நகை-பணம் ஏதும் இல்லாததால் விரக்தியடைந்த கொள்ளையர்கள் மீண்டும் முத்துராஜாவை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், சரவணா தேவியிடம் ½ பவுன் நகையை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து ரெயில் என்ஜின் டிரைவரை தாக்கி நகை-பணத்தை கொள்ளை யடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.