search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அருகே ஒரத்தநாட்டை சேர்ந்த 2 பேர் வெட்டிக்கொலை
    X

    திருச்சி அருகே ஒரத்தநாட்டை சேர்ந்த 2 பேர் வெட்டிக்கொலை

    • ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா?
    • 2 பேரின் உடல்களையும் பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலத்தின் கீழே அரிவாள் வெட்டு காயங்களுடன் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.

    இதேபோல் திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த முசிறி - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில் கண்ணனூர் அருகே பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்த துறையூர் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களை ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா? வேறு பகுதிகளில் கொலை செய்து 2 பேரின் உடல்களை தனித்தனியாக வீசிச்சென்றார்களா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரபு (வயது44), ஸ்டாலின் (46) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்து உடலை திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளுக்கு எடுத்து சென்று பாலங்களின் அடியில் வீசி சென்றது தெரியவந்தது.

    இதற்கிடையே ஒரத்தநாடு அருகே தென்னமநாடு தெற்கு தெரு பாலத்தில் ரத்தக்கறை உடைந்த மதுபாட்டில்கள், செருப்புகள் சிதறி கிடப்பதை தகவல் அறிந்து ஒரத்தநாடு போலீசார் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.அதில், தென்னமநாட்டில் கொலை செய்து விட்டு 2 பேரின் உடல்களையும் திருச்சி மாவட்ட பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரிய வந்தது.

    அவர்களை கொலை செய்தது யார் ? கொலைக்கான காரணம் என்ன ? எனபது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×