search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    யூதாஸ்
    X
    யூதாஸ்

    அவன் தான் இவன்...

    பட்டினி படுத்தும்பாடு எத்தகையது தெரியுமா? உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனை பட்டினியின் ரேகைகள் எவ்வளவு கீழாகக் கொண்டு வர முடியுமா அவ்வளவு கொண்டுவந்துவிடும்!

    இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியன் ஒருவன், ‘உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் பரவ வேண்டும்...’ என்ற எண்ணத்தில், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை ஓவியமாக வரைய ஆரம்பித்தான்.

    இயேசுநாதரின் அருள் நிறைந்த கண்கள், அன்பு ததும்பும் முகம் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை அவன் கற்பனை செய்து, அதைப் போன்ற முகத்தைத் தேடி, பல குழந்தைகள் முகத்தைப் பார்த்தான். எந்தக் குழந்தையின் முகமும், அவன் மனதில் இருந்த கற்பனை முகத்துக்கு ஏற்றபடி அமையவில்லை.

    கடைசியில், ஒரு ஏழையின் வீட்டில், தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான். இயேசுவின் கண்களில் இருந்த அருள் ஒளி, அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்ததைக் கண்டான். அக்குழந்தையின் முகத்தைப் பார்த்து, குழந்தை இயேசுவின் முகத்தை வரைந்து, திருப்தி அடைந்தான்.

    பின்னர், ‘இது தான் யூதாஸ்’ என்ற கிறிஸ்துவ சமய புத்தகத்திற்காக, இயேசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றி படம் வரைய அவன் முனைந்த போது, அதற்கான முகம் மட்டும் கிடைக்கவே இல்லை.

    அவனும் பல முகங்களைப் பார்த்தான்; ஆனால், யூதாஸ் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் ஒரு முகம் கூட இல்லை.

    கொலைகாரனைக் கொண்டு வந்து ஓவியன் முன் நிறுத்தினர்; அவன் கண்களிலோ குரூரம் இருந்தது. ஆனால், யூதாசின் கண்களில் குரூரம் இல்லை. ‘அந்த முகம் யூதாசுக்கு ஏற்றதில்லை...’ என்று அனுப்பி விட்டான்.

    இப்படியே பலரை நிராகரித்த நிலையில், கடைசியில், பசி, பட்டினியால் மிக மெலிந்து, வெறுப்பு நிறைந்த பார்வையுடன் எளியவன் ஒருவன் வந்தான்.

    அவனைப் பார்த்த உடனேயே, ‘யூதாஸ் படத்துக்கு இவனே ஏற்றவன்...’ என, அவனை உட்கார வைத்து, வரைந்து முடித்தான். யூதாஸ் ஓவியத்திற்கு மாடலாக உட்கார்ந்தவன், ஓவியனைப் பார்த்து, ‘என்னை உங்களுக்குத் தெரிகிறதா...’ என்று கேட்டான்.

    ‘தெரியலையே... ஆனால், உன்னைப் போன்ற ஆளைத் தேடி நான், சுற்றாத ஊர் இல்லை. நல்லவேளை, நீ கிடைத்தாய்...’ என்றான் ஓவியன்.

    ‘இப்போது, உங்களுக்கு யூதாஸ் போன்று தெரியும் என் முகத்தைப் பார்த்து தான், ரொம்ப வருஷத்துக்கு முன், குழந்தை இயேசுவை வரைந்தீர்கள்...’ என்றான் அவன்!

    (‘அண்ணாவின் சிந்தனைகள்’ என்ற நூலிலிருந்து அம்ரா பாண்டியன்)
    Next Story
    ×