search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்கும் குழுவை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிக்க வேண்டும்- தினகரன்
    X

    துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்கும் குழுவை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிக்க வேண்டும்- தினகரன்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்கும் குழுவை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். #ThoothukudiFiring #TTVDhinakaran
    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது. இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேர் பலியானதாக கூறுகிறார்கள். பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவத்தின்போது வானத்தை நோக்கி சுட்டு போலீசார் கூட்டத்தை கலைக்காமல் குருவிகளை சுடுவது போல பொதுமக்களை நோக்கி சுட்டது வருத்தமாக உள்ளது. ஆலை வேண்டாம் என்று போராடும் மக்களை அரசு மதிக்காமல் ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதையே இது காட்டுகிறது.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் பிரச்சனையை கையாலத்தெரியாத அரசாகவும் அடிமை அரசாகவும் கமி‌ஷன் ஏஜெண்டு அரசாகவும் செயல்படுவதையே இது காட்டுகிறது. 100 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள். ஆனால் கலெக்டர் அலட்சியமாக இருந்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் தவறாக செயல்பட்டுள்ளார். போலீஸ் துறையை கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை பதவி நீக்க வேண்டும்.

    பொதுமக்கள் மன நிலையை அறிந்து அரசு செயல்பட வேண்டும். கதிராமங்கலம், மீத்தேன் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் திட்ட பிரச்சனைகளை கவனமாக கையாள வேண்டும்.

    இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடும் சூழ்நிலை ஏற்படும். இதை விட்டுவிட்டு போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக அமைச்சர்கள் கூறுவது கோமாளிதனமான பேச்சாகும். அப்படி போராட்டத்தை சிலர் தூண்டுவதாக கூறினாலும் உளவுத்துறை போலீசார் அதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவித்திருக்கலாம். ஆனால் உளவுத்துறை போலீசார் தினகரன் என்ன செய்கிறார்? எங்கு செல்கிறார்? என்பதை கண்காணிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். நாங்கள் எதாவது கூறினால் பொய் வழக்கு போடுகிறார்கள். காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.


    தூத்துக்குடி சம்பவம் அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. இந்த நிலைக்கு இந்த ஆட்சி தான் காரணம். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இந்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை தற்போது உள்ள உயர் நீதி மன்ற நீதிபதி தலைமை கண்காணிப்புடன் நடத்த வேண்டும்.

    திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பொய்குற்றவாளி மூலம் முடிக்க பார்ப்பதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. அப்படி நடந்தால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
    Next Story
    ×