search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடி கொள்கிறார்- அர்ஜூன் சம்பத்
    X

    அமைச்சர் ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடி கொள்கிறார்- அர்ஜூன் சம்பத்

    ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிராக விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடிக் கொள்வதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #Rajinikanth #Arjunsampath
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் மணல் கொள்ளையை தடுத்த போலீஸ்காரர் கொல்லப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

    தமிழக அரசு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஆதி திராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இன்னும் அங்கு இரட்டை குவளை முறை தான் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இதுகுறித்து திருமாவளவன் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.


    அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கமல், ரஜினி மீது தரக்குறைவான விமர்சனங்களை கூறி வருகிறார். ரஜினி பட விழாவில் அவர் பேச்சுக்கு எதிராக விமர்சித்து ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார்.

    ஆனால் சமீபத்தில் வெளியான ‘‘இருட்டு அறையில் முரட்டு குத்து’’ என்ற ஆபாசப்படம் குறித்து தமிழக அரசு கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகம் வஞ்சிக்கப்படும். ஆனால் அங்கு தனிப்பெரும்பான்மையோடு பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா பெரும் வெற்றி பெறும்.

    வருகிற 29-ந் தேதி இந்து வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து இந்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களால் சிறுகுறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Arjunsampath
    Next Story
    ×