என் மலர்
செய்திகள்

கட்சி பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கியது நகைச்சுவை: இல.கணேசன்
தாம்பரம்:
தாம்பரம் அடுத்து பீர்க்கங்கரையில் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் பொற்றாமரை சங்கரன் ஏற்பாட்டில் நடந்த விநாயகர் சிலை சிறப்பு பூஜை விழாவில் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து தினகரன் நீக்கியது நகைச்சுவையாக இருக்கிறது. தெரு குழந்தைகள் விளையாட்டு போல் உள்ளது.
அ.தி.மு.க.வுக்கு மக்கள் 5 ஆண்டு ஆட்சி செய்ய வாக்களித்துள்ளனர். ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 ஆண்டு இருக்கிறது.
ஒற்றுமையாக செயல்பட்டு 5 ஆண்டு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒ.பி.எஸ். இணைந்ததை மக்கள் வரவேற்கிறார்கள்.
தினகரன் அணி என கருதப்படுபவர்களால் வரும் பிரச்சினைகளை திறம்பட சந்திப்பார்கள் என்று கருதுகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி மனு கொடுத்துள்ளனர். அது பற்றி கவர்னர் சொன்ன பிறகுதான் தெரியவரும்.
அதிர்ஷ்டவசமாக தமிழகத்துக்கு திறமையான கவர்னர் கிடைத்து உள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார். நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






