என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க.வை பலப்படுத்தவே தினகரன் பொறுப்புகளை வழங்கி உள்ளார்: தோப்பு வெங்கடாச்சலம் பேட்டி
ஈரோடு:
டி.டி.வி. தினகரனின் அணியை சேர்ந்த பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கு டி.டி.வி. தினகரன் கழக அமைப்பு செயலாளர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதையொட்டி சென்னையில் டி.டி.வி. தினகரனை சந்தித்து தோப்பு வெங்கடாச்சலம் வாழ்த்து பெற்றார்.
தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. இன்று பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மறைந்த ஜெயலலிதா அவர்கள் எனக்கு பெருந்துறை தொகுதியில் போட்டியிட 2 முறை வாய்ப்பு அளித்தார். 2முறையும் நான் வெற்றி பெற்றேன். முதல் தடவை வெற்றி பெற்ற எனக்கு மாவட்ட செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்த்தார்.
நான் ஈரோடு மாவட்ட அமைச்சராக இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க.வே வெற்றி பெற செய்தோம். மேலும் உள்ளாட்சி - எம்.பி. தேர்தல்களில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது.
ஓராண்டாக கட்சி நிர்வாகிகள் சிலர் கட்சியை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தவே புதிய நிர்வாகிகளை கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் நியமித்துள்ளார்.
கடந்த தேர்தலின்போது ஈரோட்டில் மேம்பாலம், ரவுண்டானா மற்றும் ரூ.86 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வர முன்பே நான் முயற்சி செய்திருந்தேன். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே அவரிடம் பேசி இருந்தேன். அவரும் விரைவில் செயல்படுத்த கூறி இருந்தார்.
கூவத்தூரில் தங்கி இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்குவதாக கூறி இருந்தார். ஆனால் நான் எனக்கு அந்த பதவி வேண்டாம். பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, கொடிவேரி குடிநீர் திட்டம் தான் வேண்டும் என்றேன். ஆனால் மூத்த அமைச்சர்கள் இதற்காக முயற்சியை எடுக்கவில்லை.
அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் தினகரனை பற்றி பேசி வருவது அவர்களது சொந்த கருத்தாகும். தினகரன் பற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தும் சொல்லவில்லை.
டி.டி.வி.தினகரன் கட்சியை பலப்படுத்தவும், நல்ல திட்டங்களை கொண்டு வரவும் எங்களை போன்றவர்களுக்கு சிறப்பாக பணியாற்ற பொறுப்புகளை வழங்கி உள்ளார். கட்சி தலைமை கழக பேச்சாளர்கள் கடந்த ஓராண்டாக எந்தவித கூட்டமும் இல்லாததால் வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த புதிய நிர்வாகிகளை நியமித்ததால் பொதுக் கூட்டங்கள் போட்டு கட்சியை பலப்படுத்தலாம்.
கட்சியை பற்றி ஒரு சிலர் கூறி வருவது சொந்த கருத்து என்றுதான் கூறி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முயற்சிப்பது அவரின் கோபத்தின் வெளிப்பாடு. ஆட்சியில் இருப்பவர்கள் அவரை சமாதானப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
முன்னதாக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். பிறகு எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.






