search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள் அனுமதித்தால் பிறந்தநாளில் அனைவரையும் கருணாநிதி சந்திப்பார்: மு.க.ஸ்டாலின்
    X

    டாக்டர்கள் அனுமதித்தால் பிறந்தநாளில் அனைவரையும் கருணாநிதி சந்திப்பார்: மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், டாக்டர்கள் அனுமதித்தால் பிறந்தநாளில் அனைவரையும் அவர் சந்திப்பார் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப்பூங்காவில் உள்ள நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கவோ, பிரிக்கவோ முயற்சிக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் தெரிவித்து இருக்கிறார்களே?.



    பதில்:- பா.ஜ.க.வை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வின் பின்னணியில் இல்லை என்று சொல்கிறார்கள். அதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், நான் கேட்கின்ற ஒரே கேள்வி, முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் சோதனை நடந்தது. அதன் பிறகு என்னவானது?. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், 72 இடங்களிலும் பல மணி நேரங்கள் சோதனை நடைபெற்றது. அதன்பிறகு என்ன நடந்தது?. இந்த சோதனைகளில் எல்லாம் நடவடிக்கை எடுத்தால், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கவும், இரு அணிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று சொல்லும் வாதத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

    கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை எப்படி உள்ளது?. ஜூன் 3-ந் தேதி பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வாரா?.

    பதில்:- தலைவர் கருணாநிதியின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் கள். சீரான நிலையில் அவரது உடல் நிலை உள்ளது. டாக்டர்களிடம் இருந்து அனுமதி கிடைத்தால் நிச்சயமாக தலைவர் கருணாநிதி எல்லாரையும் சந்திப்பார்.

    கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தி.மு.க. செயல் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் என பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டியிருக்கிறார்களே?.

    பதில்:- அறிக்கையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதை நம்பி நீங்களும் கேட்பது வேதனையாக உள்ளது. மாநில சுயாட்சிக்கு எதிராக, மாநிலத்தில் தேவையின்றி தலையிடுவது ஒருபக்கம் இருந்தாலும், ஏற்கனவே நடத்தப்பட்ட பல சோதனைகளில் முதலில் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த வேண்டும், கண்துடைப்பாக இருக்கக்கூடாது என்று தான் வலியுறுத்துகிறோமே தவிர நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    முன்னதாக, மே தினப் பூங்காவுக்கு வந்த தொழிலாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 25-ந் தேதி, இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாயப் பெருங்குடி மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாம் தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தினோம். காரணம், விவசாயிகள் இன்றைக்கு பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு வருகிறார்கள். எனவே, அவர்களை காப்பாற்றும் வகையில், அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரியதொரு போராட்டத்தை நாம் நடத்தினோம்.

    அனைத்து கட்சி கூட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கும் உணர்வு தொழிற்சங்கங்களின் மூலமாகவே கிடைத்தது. தொழிற்சங்கங்களின் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை தான், அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானமாக வடித்தெடுத்து, அதன் பிறகு ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்திக் காட்டினோம்.

    இந்தியாவிலேயே இப்படியொரு முழு அடைப்புப் போராட்டம் நடந்ததாக வரலாறு இல்லை. குறிப்பாக, ஒரு எதிர்க்கட்சி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, இப்படியொரு போராட்டம் நடத்தியதாக வரலாறு இல்லை. அப்படியொரு போராட்டத்தை நடத்தி நாம் வெற்றியும் பெற்று இருக்கிறோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
    Next Story
    ×