search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. சட்டசபை மீண்டும் கூட இருக்கும் நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. சட்டசபை மீண்டும் கூட இருக்கும் நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 23-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1-ந்தேதிகளில் நடைபெற்றது.

    அதன் பிறகு, மார்ச் 16-ந்தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டசபை கூட்டத்தில், 2017- 2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது. பின்னர், துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதமும் தொடர்ந்து நடந்திருக்க வேண்டும்.

    ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. சட்ட சபையும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இந்த மாதம் 2-வது வாரத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    nnn

    இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடை பெறும் இந்த கூட்டத்தில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும்போது, துறை ரீதியாக என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், பேரவை விதி எண் 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

    எனவே, இன்னும் ஓரிரு நாளில் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. அந்தக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்றும், எந்தெந்த நாளில் எந்தத் துறையை சேர்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட இருக்கிறது.


    Next Story
    ×