search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மார்பகப் புற்றுநோய்
    X
    மார்பகப் புற்றுநோய்

    மார்பகப் புற்றுநோய்- காரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

    பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். இந்த நோய் வருவதற்கான காரணங்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய்தான். கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை லட்சம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது 50 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.

    இதற்கு முக்கிய காரணம் சரியான விழிப்புணர்வு இல்லாதது மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறியாமல் அலசியமாக இருப்பதாகும். நமது உடலில் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால் புற்றுநோய் (breast cancer) செல்களாக மாறுவதாலே புற்றுநோய் ஏற்படுகிறது.

    மார்பகப் புற்றுநோய் ஏற்பட காரணங்கள்

    மார்பகப் புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும். இது 5 முதல் 10 சதவிகிதம் வரை பரம்பரையாக தாக்க வாய்ப்புள்ளது. 55 வயதை கடந்து மெனோபாஸ் ஏற்படும் பெண்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம். மற்றவர்களை விடவும் இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

    இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவதும் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள். அதேபோல பூப்பெய்தியதில் இருந்து 15 வருடங்களில் உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிகமாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் (breast cancer cause) அபாயம் அதிகமாகும்.

    திருமணம் செய்யாமல் இருக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 30 அல்லது 35 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.

    அதிகமான உடல் எடை இருக்கும் பெண்களும் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக கல்யாணத்துக்கு பிறகு பெண்கள் எடை விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.

    வருடக்கணக்கில் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோயை வரவழைக்க முக்கிய காரணமாகும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


    ஆண்டுதோறும் டாக்டர்களின் ஆலோசனைப்படி உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த உறவுகளில் யாருக்கும் மார்பகப் புற்றுநோய் இருந்தால் தொடர் பரிசோதனை அவசியம்.

    எடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குண்டான பெண்கள் கண்டிப்பாக எடையை குறைத்தாக வேண்டும். உடற்பயிற்சி மிக முக்கியம். தினமம் 3 கி.மீ நடக்க வேண்டும். 10 நிமிடங்களில் 1 கி.மீ தூரத்தை வேகமாக நடப்பது நல்லது.

    எண்ணெய், கொழுப்பு உணவுகள தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ளவும். அசைவப் பிரியர்கள் இறைச்சி உணவுகளை பொரித்து உண்பதை தவிர்த்து குழம்பாகச் சாப்பிடுவது சிறந்தது. நேரடியாக நெருப்பில் நீண்ட நேரம் சமைக்கப்படுகிற உணவுகளில் புற்றுநோய்க்கான விஷயங்கள் அதிகம்.

    அதிக மன உளைச்சல், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பாதுகாப்புப் படையை அழித்து விடும். அதன் காரணமாக காலப் போக்கில் புற்றுநோய் தாக்கலாம். எனவே மனதை லேசாக வைத்திருங்கள்.

    மார்பக புற்றுநோயை (breast cancer) ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடித்தால் அதை குணப்படுத்த முடியும். நோயின் நிலை, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பரவக் கூடியதா, பரவாத நிலையா என்பதைப் பொறுத்த அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்றும் தனித்தனியாகவோ, சேர்த்தோ மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மருந்து மாத்திரை, முறையான உணவுப் பழக்கவழக்கத்துடன், தைரியமும் தன்னம்பிக்கையும் மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க வழிவகுக்கும்.
    Next Story
    ×